அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரை “பயங்கரவாதியாக” அறிவித்த மத்திய அரசு!

அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரும் தலைமைத் தளபதியுமான முஷ்டாக் அகமது சர்காரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முஷ்டாக் சர்கார்,அல்கொய்தா மற்றும் ஜெய்ஷ்-முகமது போன்ற தீவிர பயங்கரவாத குழுக்களின் தொடர்புகள் மற்றும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்று கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, அவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தானில் இருந்து இடைவிடாத பிரச்சாரத்தை நடத்தி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

யார் இவர்:

டிசம்பர் 31, 1999 அன்று, ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 160 பணயக்கைதிகளை பாதுகாப்பாகத் திரும்பப் பெறுவதற்காக,முஷ்டாக் அகமது சர்கார் உட்பட சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பயங்கரவாதிகளை பரிமாறிக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டது.அதன்படி,முஷ்டாக் அகமது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் பணயக்கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.