தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.அதன்பின்னர்,நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது வருகின்ற ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள 10,371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த வருடாந்திர திட்டமிடுதல் அட்டவவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அந்த வகையில்,Tet தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,முதல் தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும்,அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும்,இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும்,இதர பணியிடங்களுக்கு அரசாணை வெளியானவுடன் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.