#BREAKING: தருமபுரம் ஆதீன பட்டிணப்பிரவேசம் தடையை நீக்குக – ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!

தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடையை நீக்கக் கோரி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஈபிஎஸ், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர்.

தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. பழம்பெரும் வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டண பிரவேசம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என்றும் பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள் எனவும் கூறினார். மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டணப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்கப்பட்டதுக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதினங்களுடன் 3 மணி நேரத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என்று பேட்டியளித்திருந்தார். எனவே, பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் மே 22ல் தான் பல்லக்கு தூக்கு நிகழ்வு நடக்கிறது, அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்