பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், கரும்பு வழங்கலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்று முன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரையுடன் முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் கரும்பு வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஜனவரி 2-ஆம் தேதிக்கு பதில், 9-ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.