#Breaking:சிதம்பரம் நடராஜர் கோயில்:”அதிகாரம் உண்டு” – அறநிலையத்துறை அதிரடி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால்,தங்களது குழுவினர் வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி,பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும்,கோயில் விவகாரங்கள் குறித்து பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது எனவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால்,கோயில் விவகாரங்களை விசாரிக்க குழு அமைக்க அதிகாரம் உண்டு என்று தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை பதில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,கோயில் நிர்வாகத்தை சீரமைக்க,கோயில் விவகாரங்களை விசாரிப்பது தொடர்பாக குழுவை நியமிக்க அதிகாரம் உள்ளது என தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.மேலும்,உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை என்றும்,பொது தீட்சிதர்களை கோயில் நிர்வாகத்தில் இருந்து தடுக்கவில்லை என்றும்,இதனால் ஆய்வு குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே,சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்திருந்த நிலையில்,கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை,பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment