#BREAKING : சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக்கோரிய வழக்கு- மத்திய,மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிலுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள உகான்  நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதா  என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.சீனாவில் உள்ள உகான் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவிக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிலுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமயசெல்வன் வழக்கு தொடர்ந்தார்.மேலும் சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில்,பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கினை, பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.