#BREAKING: வீராங்கனை பிரியா உயிரிழப்பு – போலீஸ் வழக்குப்பதிவு

தவறான சிகிச்சையால் விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது. இதன்பின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம். கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரியாவின் மரணம், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மருத்துவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா் அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment