#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதை அடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே, அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து சுனில் அரோரா தலைமையில், டெல்லியில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் – 234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு வங்கம் – 294,  அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது என கூறியுள்ளார். இந்த 5 மாநிலங்களின் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி என தெரிவித்துள்ளார். 80 வயதுடையவர்களுக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல, தனிநபர் விருப்பமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய இருவருக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் பிரச்சார அனுமதி தொடர்பான பணிகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்படும். வேட்மனு தாக்கலுக்கு வர அதிகபட்சமாக 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதற்றமிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி ஒளிப்பரப்பு செய்யப்படும் என அறிவித்துள்ளார். புதுச்சேரி தொகுதிக்கு ரூ.22 லட்சம் மற்ற 4 மாநிலங்களில் வேட்பாளர்களின் அதிகபட்ச செலவு தொகை 30.8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் 5 மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப் 6ம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். அசாமில் மூன்று கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். அதன்படி, முதற்கட்ட தேர்தல் மார்ச் 27, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதுபோன்று மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும். அதன்படி, மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் தெரிவித்துள்ளார். மேலும்,  சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்