#BREAKING: விடைத்தாள் திருத்தும் பணி – ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது. பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது. இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 1ம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்களை திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் ஏ.கே.டி, ஆக்சாலிஸ் என 2 மையங்கள், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் மவுண்ட்பார்க், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 மையங்கள் என மொத்தம் 4 மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர், 1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ், ஆங்கிலம் பாட விடைத்தாள்கள் காலை 15, மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும். அதேபோல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதி இல்லை என்று குற்றசாட்டி சில இடங்களில் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே,  திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கிய ஆசிரியர்களை விடுவிக்க தலைமை ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment