#Breaking:சென்னை பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை…!

சென்னை புளியந்தோப்பு குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர் குழு சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.

குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 29-ஆம் தேதி, நிபுணர் குழு முதல்வரிடம் வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்த நிலையில்,இன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம், கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்தது.

இந்நிலையில்,சென்னை புளியந்தோப்பு குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும்,இனி அரசு சார்ந்த ஒப்பந்தங்கள் எதுவும் இந்நிறுவனத்திற்கு வழங்க கூடாது,மாறாக தடைப்பட்டியலில் இந்நிறுவனத்தை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.