இருவரும் முரண்டு பிடிக்கிறீர்கள்..! பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம்..! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. 

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது. தொடர்ந்து அதிமுகவில் குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இரு அணிகள் மத்தியிலும் நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு  இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு விசாரணையை  ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஓபிஎஸ் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு அளித்தது.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில், அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணைய ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என்று வாதம் வைத்தது.

இதுகுறித்து நீதிபதிகள், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் இதுவரை நீதிமன்றம் தடுக்கவில்லை. எந்த தடை உத்தரவும் இல்லாத நிலையில் ஏன் புதிய விதி முறைகளை நீங்கள் ஏற்காமல் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் வரை விதிமுறை மாற்றங்களை ஆவணங்களில் பதிவேற்ற முடியாது என தெரிவித்தனர். பின் அதிமுகவின் இரட்டை இலை முடங்கி உள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை முடங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.  மேலும்,இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டுள்ளது.

இதனை அடுத்து பழனிசாமி தரப்பு எங்கள் தரப்பு அறிவிக்கும் வேட்பாளரை தான் பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என தெரிவித்தது. இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு இல்லை, பொது வேட்பாளரை தான் ஏற்க முடியும் என பழனிசாமி தரப்புக்கு பதில் அளித்தனர். மேலும், இருவருமே சேர்ந்து  வேட்பாளரை அறிவித்தால் நான் கையெழுத்திட தயார் என்று பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பழனிசாமி ஆதரவு வேட்பாளர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தற்போதுள்ள நிலைமைப்படி, பார்த்தால் உங்கள் இருவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும். எங்கள் யோசனையை ஏற்கவில்லை எனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டி வரும் என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இருவரும் கையெழுத்து போட வேண்டாம். எங்களிடம் விட்டு விடுங்கள் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கிறோம். இருதரப்பினரும் பேசி முடிவு எடுக்கலாம்.  ஆனால் இருதரப்பினரும் முரண்டு பிடிக்கிறீர்கள்.  நாங்கள் சில தீர்ப்புகளை கொடுக்க விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேத்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment