மலையாள நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு

திருவனந்தபுரம் : பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வருடம் மார்ச் 6ம் தேதி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து மர்மமான முறையில் இறந்தார். இவரது மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடலில் விஷ சாராயத்தில் காணப்படும் மெத்தனால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் வேதியியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. உடலில் பூச்சி கொல்லி மருந்தும் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை யாராவது விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக சாலக்குடி ேபாலீசாரும், பின்னர் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். என்றாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கோரி கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி கடந்த இரு மாதங்களுக்கு முன் நடிகர் கலாபவன்மணி மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. 

இந்த நிலையில் கலாபவன்மணி மரணத்தில் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக பிரபல மலையாள இயக்குநர் பைஜூகொட்டாரக்கரா கூறியுள்ளார். இது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் நேற்று இரவு கொச்சியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். கலாபவன்மணியின் தம்பி ராமகிருஷ்ணனும் தனது அண்ணன் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன. அவர் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார். திலீப்புடன் சேர்ந்தும் ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார். 

இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நான் பல மாதங்களுக்கு முன்பே கேரள போலீசாரிடம் தெரிவித்தேன். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்வில்லை. இப்போது திலீப்புக்கு எனது அண்ணன் மரணத்தில் தொடர்பு இருக்கலாம் என்று இயக்குநர் பைஜூ கொட்டாரக்கரா கூறியுள்ளார். எனது அண்ணன் மரணத்திற்கு பின் ஒரேஒரு தடவை தான் திலீப் எனது வீட்டிற்கு வந்தார். அண்ணன் மரணம் தொடர்பான வழக்கு குறித்து இதுவரை அவர் என்னிடமோ, எனது குடும்பத்தாரிடமோ எதுவும் விசாரிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கலாபவன்மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என புகார் எழுந்ததால் சிபிஐயும் அதிரடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமா உலகை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

முக்கிய நடிகருக்கு தொடர்பு

பாவனா விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் தீர்மானித்துள்ளனர். பலாத்கார சம்பவம் நடந்ததும் கொச்சியில் உள்ள பிரபல இயக்குநர் லால் வீட்டிற்கு பாவனா சென்றார். அவர் உடனடியாக பிரபல தயாரிப்பாளர் ஆன்றோ ஜோசப் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தாமஸ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இருவரும் உடனடியாக லால் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்த பாவனாவிடம் கேட்டறிந்தனர். அடுத்த சில நிமிடத்தில் ஆன்றோ ஜோசப், இயக்குநர் லால், பி.டி. தாமஸ் ஆகியோர் திலீப்புக்கு போன் செய்தனர். 

பலமுறை அழைத்தும் திலீப் எடுக்கவில்லை. ஆனால் அன்று இரவு ஒரு முக்கிய நடிகர் திலீப்புக்கு போன் செய்துள்ளார். அவரது அழைப்பை திலீப் எடுத்துள்ளார். இருவரும் அரை மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளனர். இதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எனவே பாவனா கடத்தல் விவகாரம் அந்த முக்கிய நடிகருக்கும் தெரிந்திருக்கும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த பிரபல நடிகர் தான் பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனிலை திலீப்புக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனவே அந்த நடிகரிடமும் விசாரணை நடத்த குறித்து போலீசார் தீர்மானித்துள்ளனர்.

காவ்யாமாதவனிடம் இன்று விசாரணை 
பாவனாவின் ஆபாச காட்சிகள் அடங்கிய மெமரி கார்டுடன் பல்சர் சுனில் கொச்சியில் உள்ள காவ்யா மாதவனின் ஆன்லைன் ஆடை நிறுவனத்துக்கு சென்றார். மெமரிகார்டை கொடுத்துவிட்டு ரூ.2 லட்சம் வாங்கி சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் காவ்யா மாதவன் திறுவனத்தில் விசாரணை நடத்தினர். அதில் மெமரிகார்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பல்சர் சுனில் வந்து சென்றதை போலீசார் உறுதிபடுத்தினர்.
காவ்யாமாதவன் நிறுவனத்தில் கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த காமிராவில் பதிவான பல காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது போலீசுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே பாவனாவை கடத்த சதித்திட்டம் தீட்டியது குறித்து திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும், அவரது தாய் ஷியாமளாவுக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இருவரையும் விசாரிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தை தற்போது போலீசார் கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தொடர்பு கொண்ட போலீசார் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இன்று இருவரும் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Castro Murugan

Leave a Comment