பசும்பொன்னில் குவியும் அரசியல் தலைவர்கள் : தேவர் ஜெயந்தி விழா

முத்துராமலிங்கதேவர் அவர்களின்  110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள  பசும்பொன் கிராமத்தில்  அக்டோபர்  28-ந்தேதி தொடங்கப்பட்டது.

முதல் நாள்  ஆன்மீக விழாவாகவும், 2-ஆம்  நாள்  அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று                           (30-அக்டோபர்), தேவரின் குருபூஜை நடைபெற்றது.
நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குருபூஜையை முன்னிட்டு இன்று காலையிலேயே  பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நினைவிடம் வந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஜோதி ஏந்தி வந்திருந்தனர். அதனை  தொடர்ந்து நினைவிடம் மற்றும் அங்கு தங்க கவசத்தில் ஜொலித்த முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 8.45 மணிக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,   துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி. மாவட்ட கலெக்டர் நடராஜன், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி  மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பாக  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரிய சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, நேரு, சத்தியமூர்த்தி, பெரிய கருப்பன், மாவட்ட செயலாளர் திவாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் அ.தி.மு.க. அம்மா அணி, பா.ம.க., தே.மு.தி.க., ம.தி. மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மரியாதை செலுத்தினர்.

மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலமும்
பசும்பொன், கமுதி உள்ளிட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. மேலும்  பல்வேறு இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்கானிக்கபடுகின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment