சசிகலா மீதான அதிருப்தியால் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து சென்றது. அப்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரு அணிகளாக இருந்து வந்தன.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டு சசிகலா சிறை சென்றபிறகு சில எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து தினகரன் அணி, முதல்வர் பழனிச்சாமி அணி என சசிகலா அணி இரண்டாக உடைந்தது.
முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு தினகரன் அணி மட்டும் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணி, மீண்டும் முதல்வர் பழனிச்சாமியுடன் இணைந்து அரசுக்கு ஆதரவு அளித்தனர். அதேபோல், கருத்து வேறுபாட்டால் தனித்து செயல்படுபவர்கள் (தினகரன்) ஆட்சியை காப்பாற்றும் விதமாக முதல்வருடன் இணைந்து செயல்பட வேண்டும் என தம்பிதுரை அழைப்பு விடுத்தார்.