பீகாரில் சாதிவாரி இடஒதுக்கீடு அதிகரிப்பு.! முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, சில மாதங்களுக்கு முன்னர் ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்திருந்தது. இந்த கணக்கெடுப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து இருந்தாலும், இதன் மூலம் இடஒதுக்கீடு அளவீடு மாற்றியமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார்.

முதல்வர் நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை முழு அறிக்கையாக பீகார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்று வந்த போது மிக முக்கிய அறிவிப்பை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.

அதன்படி, பீகாரில் உள்ள 13.07 கோடி மக்கள் தொகையில் 2.02 கோடி பேர் பொது பிரிவினர் என்றும், 3.54 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 4.70 கோடி பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 2.56 கோடி பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் ஓபிசி பிரிவினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடானது 43 சதவீதமாகவும், எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவீத இடஒதுக்கீடு 20 சதவீதமாகவும், பழகுடியினருக்கு வழங்கப்பட்டு வந்த 1 சதவீத இடஒதுக்கீடு 2 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாகவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.

மத்திய அரசின் இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ், ஒரு மாநிலத்தில் 50 சதவீதம் மட்டுமே உள்இடஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், பீகார் மாநிலத்தில் தற்போது முதல்வர் அறிவித்துள்ள இடஒதுக்கீடு அளவானது  50 இல் இருந்து 65 சதவீதமாக மாறிவிட்டது. மேலும் உயர்சாதி வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டை சேர்த்தால் மாநில இடஒதுக்கீடானது 75 சதவீதமாக உயர்ந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.