கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பீகார் மாநில தலைமைச் செயலாளர் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிக வேகமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.மேலும்,அவ்வப்போது திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் சிலரும் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில்,பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் தற்போது சிகிச்சை பலனின்றி அருண்குமார் சிங் இன்று உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை இயக்குநர் அப்துல் ஹய் தெரிவித்தார்.

இதனையடுத்து,பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.