தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ. பயணம் செய்த ஜோதி கொலையா? பரவும் வதந்தி!

காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து, 1,200 கி.மீ. பயணம் மேற்கொண்ட ஜோதி எனும் சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறும் செய்தி வதந்தி. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, வெளிமாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு  நடைப்பயணமாகவும், சைக்கிள் மூலமாகவும் சென்று வந்தனர்.

இதன்காரணமாக, தனது காயமடைந்த தந்தையை 15 வயதான ஜோதி குமாரி என்ற சிறுமி, அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து தந்தையை சைக்கிளில் அமரவைத்து,  10 நாட்களில் 1,200 கி.மீ தூர பயணித்து, தனது சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்தார். சிறுமியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டிய நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் மகள் இவன்கா டிரம்ப், அந்த சிறுமியின் மனவலிமை குறித்து பாராட்டினார்.

இந்நிலையில், அந்த சிறுமி ஜோதி சிங் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் #JusticeForJyoti எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வந்தது. ஆனால், அது வேறொரு ஜோதி. கொல்லப்பட்ட பெண்ணின் பெயரும், இந்த சிறுமியின் பெயர் மற்றும் அந்த பெண் இருக்கும் ஊரும் ஒரே ஊர் என்பதே இந்த செய்தி பரவுவதற்கான காரணம் என கூறப்படுகிறது.

அந்த சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அர்ஜூன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.