தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால்,கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், காலை 10 மணி வரையே அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,கொரோனாவால் 335 பேர் ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 17,670 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் அசோசியேசன்ஸ்  தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், “வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைகளுக்கு காலை 9.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும்.மேலும்,வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் மட்டுமே இயங்கவும், அத்தியாவசிய சேவைகளான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகளே மட்டுமே செய்யவும் அனுமதிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல்,அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களின் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில்,நேற்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.