வடகிழக்கு பருவமழை தீவிரம்… இந்த 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை – பாலச்சந்திரன்

தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அடுத்த ஒருசில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனவே, 2 நாட்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என்றும் தென்மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் தெரிவித்தார்

தமிழகத்திலேயே சீர்காழியில் அதிகளவாக 24 செமீ அதி கனமழை!

தொடர்ந்து அவர் கூறியதாவது, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுபோன்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்