#AUSvIND: முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் தற்போது 4-வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது. இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,மார்கஸ் ஹாரிஸ் இருவரும் களமிறங்கினார்.

ஆனால் வந்த வேகத்தில் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். டேவிட் வார்னர் ஒரு ரன்னும், மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்னுடன் வெளியேறினார். இதையடுத்து, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 26 ரன்களில் வெளியேற பின்னர், மேத்யூ வேட், மார்னஸ் லாபுசாக்னே  இருவரும் கூட்டணி வைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த இருவரையும் தமிழக வீரர் சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் நடராஜன் விக்கெட் வீழ்த்தினார். இதனால், மார்னஸ் லாபுசாக்னே 108, மேத்யூ வேட் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து, கேமரூன் கிரீன் 28*, டிம் பெயின் 38* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்து உள்ளனர்.

இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

author avatar
murugan