AUSvIND: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 69 ரன்கள் எடுத்தார். பின்னர், ஸ்மித் களமிறங்கினார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்ச் சதம் விளாசி 114 ரன்கள் குவித்தார்.

பின் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மெக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். கடைசிவரை அதிரடியாக விளையாடி வந்த ஸ்மித் 66 பந்தில் 105 ரன்கள் குவித்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 374 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டும், பும்ரா, நவ்தீப் சைனி, சாஹல் தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். 375 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், தவான் இருவரும் இறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்தில் மயங்க் அகர்வால் 22 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, பின் களமிறங்கிய கோலி 21 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்னிலும், கே.எல் ராகுல் 12 ரன்னிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இது தொடர்ந்து ஹர்திக் பண்டியா, தவான் இருவரும் கூட்டணி அமைத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 74 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், 90 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இறங்கிய ஜடேஜா 25, நவ்தீப் சைனி 29 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan