ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை – ஐகோர்ட் உத்தரவு!

2001-2006 அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2012ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ்-ஐ சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இவ்வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட நிலையில், தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ்.

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் நேற்று ஆணையிட்டிருந்த நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை மாறுகிறது என நீதிபதி வெங்கடேஷ் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அவர் கூறுகையில், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறுகிறது.

எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கப்பட்ட நோக்கம் அழிந்து பச்சோந்தியாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. ஆட்சிக்கு முன்னர் ஒரு நிலைபாடு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வேறு நிலைப்பாட்டை விஜிலென்ஸ் எடுத்துள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளை ஆராயப்படும். இதுபோன்ற தவறுகளை அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயம் சிதைந்துவிடும்.

ஓபிஎஸ் வழக்கில் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் அரசிடம் தாக்கல் செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அரசில் இருந்து விலகி செயல்பட வேண்டும். 374% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என விஜிலென்ஸ் கூறியதாக நீதிபதி குறிப்பிட்டார்.

குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது. 2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நிலையில், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்