தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி கடன் வழங்க ஆசிய வங்கி ஒப்புதல்.!

  • தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பிலும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி சார்பில் ஒரு சில நாட்களில் ஒப்பந்தம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் உலக வங்கி, நபார்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.17,942 கோடியும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்திற்காக ரூ.2,400 கோடி மற்றும் சென்னையில் சுற்றுவட்ட சாலை 2-வது, 3-வது கட்டமும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த ரூ.6,175 கோடி கேட்டு ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியிடம் கடனுதவி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அதிகாரிகளும் டெல்லி சென்று அந்த அறிக்கை தொடர்பாக வாங்கி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி துணை தலைவர் டி.ஜெ.பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை போது தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பின்னர் தமிழக அரசு சார்பிலும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி சார்பில் ஒரு சில நாட்களில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த 4 திட்டப் பணிகளையும் டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்