மோடியும் கைது செய்யப்படுவாரா? கெஜ்ரிவால் அதிரடி கேள்வி

Arvind Kejriwal: நான் ரூ.100 கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த பணம் எங்கே என கெஜ்ரிவால் கேள்வி

மதுபான கொள்கை, ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், இதில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், ‘கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தங்கள் கட்சியான ஆம் ஆத்மியை அழிக்க அமலாக்கத்துறை இலக்குடன் செயல்படுவதாக நீதிபதியிடம் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி கேட்டதற்காக ஆதாரம் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்தது.

அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ரூ.100 கோடி ஊழல் என்றால் அந்தப் பணம் எங்கே உள்ளது என்று வாதம் செய்தார், தொடர்ந்து அவர் கூறியதாவது, மதுபானக் கொள்கை வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை. இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்னு தீர்ப்பளிக்கவில்லை.

வெறும் 4 பேர் என்னைப் பற்றி கூறியதால் கைது செய்யப்பட்டிருக்கிறேன், நால்வர் சாட்சி கூறியதற்காக ஆட்சியில் இருக்கும் முதல்வர் கைது செய்யப்படலாமா? இதே போன்ற ஊழலில் மோடியும், அமித் ஷாவும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் கைது செய்யப்படுவார்களா என கேள்வி எழுப்பினார்.