சிறப்பு அந்தஸ்து ரத்து… 4 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது.

இந்த வழக்கை16 நாட்கள் விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.   இந்நிலையில், 370- பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று  தீர்ப்பு வழங்குகிறது. விசாரணையின் போது, ​​370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை ஆதரித்து மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, ராகேஷ் திவேதி, மற்றும் பலர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

மனுதாரர்கள் சார்பில் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், ஜாபர் ஷா, துஷ்யந்த் தவே மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

 

 

author avatar
murugan