மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சில வாரங்களுக்கு முன்னதாக 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சமீபத்தில் தான் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மேலும் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை சிங்களை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் அண்மையில் தான் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 43 பேரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்பமுடியவில்லை. அதற்குள் மேலும் 21 மீனவர்களை கைது செய்வது அத்துமீறலின் உச்சமாகும்.

இப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கொரோனா தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யவும், இலங்கையிடம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Castro Murugan