முக்கிய அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பதிவு தொடங்கியது.!

பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத்தேர்வு எழுத இருப்பவர்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கருத்துபவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதுபவர்கள், இன்று முதல் 27ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவ, மாணவிகள் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட படத்துக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியாது. மேலும், தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் இன்று முதல் 27ம் தேதி வரை அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக துணைத் தேர்வு எழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இந்த துணைத் தேர்வை எழுத மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் 28-ம் தேதியன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் ‘தக்கல்’ திட்டத்தில் ரூ.1,000 சிறப்பு அனுமதி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

துணைத்தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்டு மாதம் 6, 9, 11, 13, 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்