மாணவர்களிடம் நீட் எதிர்ப்புக்கு ‘கட்டாய’ கையெழுத்து.? உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இந்திய அளவில் பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இதனை எதிர்த்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சில மாணவர்கள் மனமுடைந்து  தற்கொலை செய்துகொள்ளும் சோக நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவதாக கூறி அதனை தமிழகத்தில் தடை செய்ய ஆளும் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு, சட்டப்பேரவையில் தீர்மானம் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து எனும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது.

நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை நில்லுங்கள்.. பெருமையை உங்களுக்கே தந்துவிடுகிறோம் – அமைச்சர் உதயநிதி 

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப கடந்த சில நாட்களாக இந்த கையெழுத்து போராட்டத்தை திமுக செயல்படுத்தி வருகிறது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாணவர்களும் பங்கெடுத்து கையெழுத்திட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திமுக கட்சி சார்பாக நடத்தும் போராட்டத்தில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். இதனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கானது, நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி,  லட்சுமி நாராயணன் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறி அடுத்த வாரம் வழக்கமான வழக்காக இதனை தாக்கல் செய்யுமாறு கூறி உத்தரவிட்டனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.