தேர்தல் முடியட்டும்.. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சிறை… அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

Annamalai: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சுழலில் தனது செல்போனை தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுக்கேட்பதாக பகிரங்கமான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தமிழக உளவுத்துறை அதிகாரிகள் எனது செல்போனை ஒட்டுக்கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி, உறவினர்கள் மற்றும் எனது நண்பர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்படுகிறது.

இதில் குறிப்பாக பிரெஸ் போன்களையும் ஒட்டுக்கேட்கின்றனர். நான் என்ன செய்கிறேன்என்பது உள்ளிட்டவைகளை உளவு பார்த்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தமிழக உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த உளவு தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இப்படிலாம் செய்தா கோவை தேர்தல் முடிவை மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை,  கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்திருக்கிறது உளவுத்துறை என்றார். மேலும் கூறியதாவது,  தெலுங்கானாவில் சுமார் 2 லட்சம் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் மாநிலத்தின் உளவுத்துறை அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

தெலுங்கானாவில் உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் தற்போது அமெரிக்காவில் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலை தமிழ்நாட்டுக்கும் வரத்தான் போகிறது. எத்தனை நாள் ஆடுவார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள். ஒவ்வொரு அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டும். இந்த ஆட்சி நிரந்தரமாக இருக்க போறதில்லை எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்