அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் – ஹரியானா உள்துறை மந்திரி!

ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து மையங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என ஹரியானா உள்துறை மந்திரி விஜ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட கொரோனாவுக்கு சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தான் தற்போது அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை தடுப்பூசி, மருந்துகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு என மருத்துவமனை நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முக்கியமாக ஆக்சிஜன் தான் அதிக அளவு தேவைப்படுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்களையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என ஹரியானா உள்துறை மந்திரி விஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுமூகமான செயல்பாடு மற்றும் பாதுகாப்புடன் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற வேண்டுமானால் அனைத்து ஆக்சிஜன்  உற்பத்தி மையங்களையும் ராணுவம் அல்லது துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal