அனைவரும் பயன்பெறும் வகையில்  வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன -நிர்மலா சீதாராமன்

அனைவரும் பயன்பெறும் வகையில்  வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  வேளாண் சட்டம் குறித்து சென்னையில் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த வேளாண் சட்டம் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது.3 வேளாண் சட்டங்கள் நீண்ட நாட்களாக நிலைவையில் இருந்த சீர்திருத்தம். தற்போது விளை பொருட்களின் விலை, யாரிடம் விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் தீர்மானிக்க முடியும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை விற்பனை செய்யலாம். மாநில வேளாண் சந்தைகள் மாற்றப்படவில்லை.குறைந்த பட்ச ஆதரவு விலை தொடரும். எந்த வகையிலும் அது நீக்கபடமாட்டது. இது குறித்து பரப்பப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே. APMC சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்தால் 8.5 சதவிகித வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால் விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை.விவசாயிகள் தொடங்கி நுகர்வோர் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்கள் விவசாயிகளை சுரண்டும் என்ற அச்சத்திற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.