தூத்துக்குடியை தொடர்ந்து திருநெல்வேலியிலும் நாளை விடுமுறை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நிலையில் அதி கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதி கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இடைவிடாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுமார் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. குடியிருப்புகள் எல்லாம் முதல் தளம் வரை மூழ்கிவிட்டன. கட்டுக்கடங்காத மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளையும் டிச.19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தற்போது, கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருநெல்வேலியிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளையும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்