சச்சின், ரோஹித் பிறகு உலகக்கோப்பையில் சாதனை படைத்த டேவிட் வார்னர்..!

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தபோது ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்ரம் வார்னரை போல்ட் செய்தார்.

முதல் ஆஸ்திரேலிய வீரர்:

வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 528 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக 500 ரன்னிற்கு மேல் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பையில் வார்னர் முதல் முறையாக 500 ரன்னிற்கு மேல் அடித்தார். வார்னரைத் தவிர ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் (2007), மேத்யூ ஹெய்டன் (2007) மற்றும் ஆரோன் பின்ச் (2019) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரே உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு மேல் எடுத்த வீரர்கள்:

இந்த சாதனை மூலம் இவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார். இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு  எடுத்த மூன்றாவது வீரர் வார்னர் ஆவார். முன்னதாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003  உலகக்கோப்பைகளிலும், இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan