Aditya L-1: அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஆதித்யா எல்-1.! ஆய்வு முடிவை வெளியிட்டது இஸ்ரோ..!

ஆதித்யா எல்-1 விண்கலம் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கி அறிவியல் தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இலக்கை நோக்கி பயணம்:

அதன்பிறகு, ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். அதன்படி, செப்டம்பர் 2ல் அனுப்பப்பட்ட விண்கலம் 16 நாட்களாக பூமி சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.

சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு:

இதன்பிறகு, கடந்த செப்-3ம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல் கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து, செப்டம்பர் 5ம் தேதி இரண்டாம் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது.

சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. மேலும், செப்டம்பர் 10 ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்-15ம் தேதி 4ம் கட்டமாக 256 கிமீ x 1,21,973 கி.மீ தூரத்திற்கு ஆதித்யா எல்1 விண்கலம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு நாளை (செப்டம்பர் 19ம் தேதி) அதிகாலை 2 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.

அறிவியல் தரவுகள் சேகரிப்பு:

இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் ஆய்வு பணியைத் தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இஸ்ரோ, “ஆதித்யா-எல்1 அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன. இந்தத் தரவு விஞ்ஞானிகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களின் நடத்தையை ஆய்வு செய்ய உதவுகிறது. அலகுகளில் ஒன்றால் சேகரிக்கப்பட்ட ஆற்றல் துகள் சூழலில் உள்ள மாறுபாடுகளை படம் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.