கத்திமுனையில் நடிகையிடம் பணம் கொள்ளை..!

பிரபல இந்தி நடிகை வீட்டில் நுழைந்து கத்தி முனையில் 6 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர் கொள்ளையர்கள்.

சண்டிகரில் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியை காண்பித்து பணம் பறித்துள்ளனர். இந்த நடிகை வீட்டில் உள்ள பெற்றோர் 10 நாட்களுக்கு முன்னர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண் வருவதற்காக வாசல் கதவை திறந்து வைத்துள்ளார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த 3 கொள்ளையர்கள் கத்தியை காட்டி நடிகையை மிரட்டியுள்ளனர்.

பின்பு நடிகையிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி பின் எண்ணையும் அறிந்துகொண்டு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு ஒருவன் சென்று 20,000 ரூபாயை எடுத்து வந்துள்ளான். பின்னர் மீண்டும் நடிகையை மிரட்டி வீட்டில் உள்ள பணத்தை கேட்டுள்ளனர். கத்தியின் காரணத்தால் பயந்த நடிகை வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து விட்டு, வீட்டில் உள்ள பாத்ரூமில் சென்று கதவை மூடி ஒளிந்து கொண்டுள்ளார்.

பணத்தை வாங்கிய கொள்ளையர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர். இதன் பின்னர் நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், ஒருவாரத்திற்கு முன்னர் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் வந்து வைத்தவர்களில் ஒருவன் அந்த கொள்ளையர் கும்பலில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசாரும் கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.