“மதிப்புக்குரிய திருமாவளவன் அவர்களுக்கு” – நடிகர் சூர்யா கடிதம்!

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமேசான் ஒடிடியில் வெளியானது.இப்படம் பொதுமக்கள்,தமிழக முதல்வர் ஸ்டாலின்  மற்றும் பிற அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றது.

எனினும்,இப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது.இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆனால்,ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்து கூறுகையில்:

“புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் தற்போது ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலைநாயகன்’ சூர்யாவையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்”,என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,பாராட்டு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன.மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தாங்கள் குறிப்பிட்டதைப் போல மாண்புமிகு தங்கள் தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்களின் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம், உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்.ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி”,என்று தெரிவித்துள்ளார்.