நடிகர் சோனு சூட் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு ….!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் சோனு சூட் நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

இந்தியாவில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் உதவினாலும், ஒரு சில நேரங்களில் மட்டுமே அரசு உதவிகள் மக்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் இந்தி திரை உலகின் நடிகர் சோனு சூட் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் கஷ்டப்படும் பல மக்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்திலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு சோனு சூட்டை நிறுத்த காங்கிரஸ் அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில், இன்று டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமாகிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சோனு சூட் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது நடிகர் சோனு சூட் டெல்லி அரசின் ‘தேஷ் கே மென்டோர்ஸ்’ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் சோனு சூட், இன்று லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்டுவதை விட பெரிய சேவை எதுவும் இல்லை. டெல்லி முதல்வருடன் ஒன்றாக இணைந்து இந்த பணியை செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal