இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு 10 நிமிடத்தில் உதவிய நடிகர் சோனு சூட்..!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது அத்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்று ட்வீட் செய்து கேட்டவுடன்,உடனே 10 நிமிடத்தில் ஆக்சிஜன் அனுப்பப்படும் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்த ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று மாலை,கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் தனது அத்தைக்கு ஆக்ஸிஜன் சிலிரண்டர் உதவி வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து,பாலிவுட் நடிகரும்,சமூக சேவகருமான சோனு சூட் உடனே தனது ட்விட்டர் பக்கத்தில்,”10 நிமிடத்திற்குள் உங்களுடைய அத்தைக்கு ஆக்ஸிஜன் உதவி கிடைக்கும்”, எனத் தெரிவித்தார்.இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் வெளிமாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கும்,ஐடி நிறுவனத்தில் வேலை இழந்த இளம் பெண்ணுக்கு உதவி செய்தது, விவசாயிக்கு மாடு வாங்கிக் கொடுத்தது உட்பட பல வகையிலும் சோனு சூட் தொடர்ந்து சிறப்பான முறையில் சமூக சேவை செய்து வருகிறார்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு,பெங்களூரில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இலவசமாக கொடுத்து,அனைவரின் உயிர்களையும் காப்பாற்றி பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.