கிசான் திட்டத்தில் முறைகேடு ! சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் – ஜோதிமணி எம்.பி.

கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று உள்ள நிலையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல  பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசினார்.அவர் பேசுகையில், உழவர் நிதி உதவி திட்டத்தில் (கிசான்) பல  கோடி ரூபாய் முறைகேடு நடத்துள்ளது. ஆளும் கட்சி உதவி இன்றி இது நடைபெற்று இருக்காது. அதிகாரிகளை மட்டும் கைது செய்கின்றனர். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.