ஆருத்ரா மோசடி.. இன்று விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே சுரேஷ்!

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ரூ.35 ஆயிரம் 10 மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறினர். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்தனர். ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது.

அதன்படி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2438 கோடி பெற்று மோசடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ரா மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமானது.

இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவினர் பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் ஆர்.கே. சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றும் தலைமறைவானார். பின்னர் நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு நாள்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே சுரேஷ் விமான நிலையத்தில் வைத்து  குடியுரிமை அதிகாரிகள்  விசாரணை நடத்தினார். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்கே சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இந்நிலையில், இன்று நடிகர் ஆர்.கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார்.

 

 

author avatar
murugan