தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தீவிர கள்ளச்சாராய வேட்டையில் 136 பேர் அதிரடி கைது.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர. கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 57 சாராய வியாபாரிகள் கைதானர்.
அங்கு, 109 லிட்டர் சாராயம், 450 லிட்டர் மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைதான நிலையில், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்ட நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.