திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமேனி என்பவர், பள்ளி நேரத்தில் தூங்குவது, செல்போன் பார்ப்பது உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் சரிவர பாடங்களை நடத்துவதில்லை என்று கூறும் கிராம மக்கள், அதுகுறித்து கேள்வி எழுப்பும் பெற்றோரை ஆசிரியர் அலட்சியமாகப் பேசி மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். அவரை பணிநீக்கம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான இன்று, நுழைவாயில் முன்பு அமர்ந்து பெற்றோர் போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.