திருவனந்தபுரம் : கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாயமான 23 வயது இளைஞர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து விட்டதாக தன்னுடைய பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இளைஞனின் தாய் மகனை வீட்டிற்கு திரும்பி வந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நஜீப், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் எம் டெக். படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காணவில்லை. இதனால் நஜீப்பின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மாயமான நஜீப் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நஜீபின் பெற்றோரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தள்ளது. அதில் நஜீப் தன்னுடைய தாயாருக்கு சொல்லியுள்ள செய்தியில் ‘அம்மா நான் அடைய வேண்டிய ஹிஜ்ராவை அடைந்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
நஜீப்பிற்கு அவருடைய தயார் பலவித கோரிக்கைகளை வைத்துள்ளார், மீண்டும் வந்து விடு இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்டதாகத் தெரியவில்லை. அதற்கு அவர் நாம் அனைவருமே விரைவில் இறக்கத்தான் போகிறோம், நம்பிக்கையில்லாத ஆட்களோடு நாம் ஏன் உயிர் வாழ வேண்டும். ஹிஜ்ரா மட்டுமே நமக்கு ஏற்ற இடம் என்று நஜீப் தன்னுடைய தாய்க்கு பதில் அளித்துள்ளார்.
விசாரணையில் நஜீப் ஹைதராபாத்தில் இருந்து துபாய் சென்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கிருந்து ஈரானுக்கு அவர் ஒரு மாத சுற்றுலாப் பயணி விசாவில் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அங்கிருக்கும் தூதரகமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.