#அதிர்ச்சி: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 747 மருத்துவர்கள் உயிரிழப்பு.. தமிழகத்தில் அதிகமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு தங்களின் உயிரை பனையவைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி தொகுப்பில், இந்திய மருத்துவ சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.எம்.ஏ பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லெலே தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 89 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 80 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலே கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 74 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆந்திராவில் 70 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 66 மருத்துவர்களும், கர்நாடகாவில் 68 மருத்துவர்களும், கொரோனா அதிகரித்து வரும் குஜராத்தில் 62 மருத்துவர்கழும், பிகார் மாநிலத்தில் 40 மருத்துவர்களும், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் 22 மருத்துவர்களும், அசாம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.