7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டை அருகில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இருக்கும் மூலக்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற 27 வயது இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த இவருடைய அண்ணன் முறை உறவினரின் ஏழு வயது மகளை பாலியல் கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக திருமயம் மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதி கட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, உறவினர் முறையில் இருக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காரணத்தால், ஆயுள் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும், 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியை பாலியல் தொல்லை செய்த காரணத்தால் மேலும் ஒரு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். இதில் இதுவரை ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.