உங்கள் சிறுநீரகம் பாதிப்படைவதை உறுதி செய்யும் 5 அறிகுறிகள்…!

மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் குழாய் வழியாக நீக்குவதற்கு இந்த சிறுநீரகம் உதவுவது மட்டுமல்லாமல், ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே மனித உடலில் உள்ள இந்த இரண்டு சிறுநீரகங்களும் சேதமடையாமல் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இந்த சிறுநீரகம் சேதமடையும் போது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, சிறுநீரகம் பாதிப்படைவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது. இன்று உங்கள் சிறுநீரகம் பாதிப்படையும் பட்சத்தில் எந்தெந்த அறிகுறிகள் உங்கள் உடலில் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் முற்றிலுமாக உங்கள் சிறுநீரகம் செயலிழந்து விடாமல் பாதுகாக்கலாம். இப்பொழுது இது குறித்து விரிவாக அறியலாம்.

வீக்கம் & எடை அதிகரிப்பு

உங்கள் சிறுநீரகம் சேதமடைய தொடங்கும் பொழுது உங்கள் உடலிலிருந்து  அதிக நீர் மற்றும் உப்பு வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக கைகள், கால்கள் மற்றும் முகம் போன்றவற்றில் வீக்கம் ஏற்படும். இந்த நிலை எடிமா என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக உடலில் கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் உடலிலேயே தங்கி கொண்டிருக்கும். அதன் விளைவாக உங்கள் உடல் எடையும் அதிகரிக்க தொடங்கும்.

சிறுநீர் வெளியேற்றம் குறைவு

வழக்கமாக நீங்கள் கழிக்கும் சிறுநீரை விட உங்களது சிறுநீரகம் பாதிக்கப்படும் போது சிறுநீர் வெளியேற்றம் மிகக் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் உங்களது சிறுநீரகம் சரியாக இயங்காது தான் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் சில ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டாலும், மருத்துவரின் ஆலோசனையையும் பின்பற்றுவது நல்லது.

சோர்வு

சிறுநீரகம் பாதிக்கப்படும் பொழுது உடலில் அதிக அளவு சோர்வு ஏற்படும். ஏனென்றால் சிறுநீரகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஹீமோகுளோபின் அளவை சிறுநீரகம் கட்டுக்குள் வைத்திருக்கும். ஆனால் சிறுநீரகம் பாதிப்படையும் போது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக ரத்த சோகை பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் உடலில் இரத்தம் இல்லாததால் எல்லா சமயங்களிலும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

பசியின்மை

சிறுநீரகம் பாதிக்கப்படும் பொழுது நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேற்றப்படாது. இதன் விளைவாக நமது உடலில் எடை அதிகரிப்பு மற்றும் கை கால் வீக்கம் ஏற்படும். அதே சமயம் பசியும் ஏற்படாது. எனவே உடலில் நச்சுப் பொருட்கள் அதிகம் சேரத் தொடங்கி ஒழுங்கான பசி ஏற்படாது. மேலும் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு இது காரணமாக அமையும்.

குளிர்ச்சி

சிறுநீரகம் சரியாக இயங்காத பட்சத்தில் ரத்தசோகை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். எனவே ஒரு வெப்பமான இடத்தில் கூட சிறுநீரக பாதிப்பு உள்ள நபருக்கு குளிர்ச்சியான ஒரு உணர்வு தோன்றும். எனவே மருத்துவரிடம் சென்று இது குறித்து ஆலோசனை மேற்கொள்வது நல்லது.

author avatar
Rebekal