4 வயது மகன் கொலை வழக்கு.! தாயாரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார்.!

தனது 4 வயது மகனை கோவாவில் ஒரு தனியார் விடுதியில் கொலை செய்து உடலை வேறு இடத்திற்கு கடத்தி சென்றதாக பெங்களூருவை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன தலைமை அதிகாரியான சுசானா சேத் என்பவரை கோவா போலீசார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீசார் உதவியுடன் கடந்த திங்களன்று கைது செய்தனர்.

4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!

செய்வ்வாயன்று கோவா அழைத்து வரப்பட்ட சுசானா சேத் தற்போது நீதிமன்ற காவலில் கோவா போலீசார் விசாரணை வளையத்தில் உள்ளார். அவரிடம் காவல்துறையினர் பல்வேறு வகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரையில் தனது மகனை தான் கொலை செய்யவில்லை என்று தான் கூறி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தான் தற்கொலைக்கு முயன்றதாகவும்,  தனது மகன் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டான் என்றும் , சூட்கேஸ் எடை அதிகமானது தனக்கு தெரியாது என்றும் சுசானா சேத் போலீசார் விசாரணையில் கூறினார். சிறுவனின் பிரேத பரிசோதனை விவரத்திலும், சுசானா சேத் கைது செய்யப்படுவதற்கு 36 மணிநேரத்திற்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என்றும், சிறுவன் கழுத்து நெறிக்கப்பட்டோ, மூச்சு திணறல் ஏற்பட்டோ இறந்துவிட்டான் என்றும்  சிறுவன் உடலில் ரத்த காயங்கள் இல்லை என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில், கோவா போலீசார் சுசனா சேத்தை குற்றக்காட்சியை மீண்டும் உருவாக்குவதற்காக அவர் தங்கியிருந்த கோவாவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இதுவும் விசாரணையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது இதன் மூலம், சிறுவனின் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என காவல்துறையினர் யூகித்தனர்.

ஆனால், சுசானா சேத் தான் தற்கொலைக்கு முயற்சித்த இடம் இது தான் என்று மட்டுமே போலீசாரிடம் காட்டியுள்ளார். தனது மகனை கொன்றதாக அவர் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று கோவா போலீஸார் தெரிவித்தனர். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், இதுவரை குழந்தை இறந்ததற்கான எந்த வருத்தமும் காட்டவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.