திருச்சியில் 17வயது சிறுமியிடம் அத்துமீறிய பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட்!

திருச்சி முக்கொம்பு பகுதிக்கு நண்பருடன் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரையும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தளங்களில் முக்கொம்பு ஒன்றாகும். இங்கு திருச்சியில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் சுற்று பகுதியில் இருப்பவர்களும் வருகை தருவார்கள். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 சிறுமி தன்னுடைய நண்பர் ஒருவருடன் முக்கொம்பு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றக்கூடிய சசிகுமார் மற்றும் தனது சக காவலர்கள் நண்பர்களான பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகியோர்கள் வந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த 17 வயது சிறுமியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 17 வயது சிறுமி முக்கொம்பூர் அருகே உள்ள ஜீயபுரம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார்.

காவலர்கள் மீதே புகார் அளிக்கப்பட்ட விவகாரம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் சென்றது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த  விசாரணையில் சிறுமியை தொந்தரவு செய்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போக்ஸோ வழக்கு பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்