குழந்தைகளை பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!-அமைச்சர் எச்சரிக்கை..!

14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று சென்னையில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணித்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. கிண்டி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். இதில் தொழிலாளர் நலன் துறை இயக்குனர் செந்தில் குமார், இணை இயக்குனர்கள் ஜவகர், சரவணன், குமார் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், இன்று கடைபிடிக்கப்படும் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை யாரும் சட்டவிரோதமாக பணியமர்த்தினால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால், 20,000 முதல் 50,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தமிழ்நாட்டில் இயங்கி வரும் கிட்டத்தட்ட 47,000 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் விதமாக ஆலைகள் அமைந்துள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் குழு அமைத்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.