அக்.,14ல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.,14ம் தேதி முதல் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்  இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்ளிடவைகள்) அக்.,14ம் தேதி  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும்  அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும். மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்,  மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண்  சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக  தேர்ச்சியடையாத மாணாக்கர்களுக்கு, அவர்கள் இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக  வழங்கப்படும் என்றும் இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி  பெற்ற பின் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு  முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பிறகு  அவர்களுக்கும் ஒருங்கிணைக்கப் பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய  பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படுவதாகவும் நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச்  2020 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியல்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி, தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள், பெற்றோர்கள்  கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளி, தேர்வு மையத்தில் தேர்வர்கள் பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக  பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

author avatar
Kaliraj